
மார்கழி முதல்நாளான இன்று சபரிமலைக்கு அதிகமான பக்தர்கள் சென்ற வண்ணம் உள்ளனர். தமிழகம் வழியாகச் சபரிமலை செல்லும் பக்தர்கள் குற்றாலம் அருவியிலும் குவிந்து வருகின்றனர். இதனால் குற்றாலத்தில் திரும்பிய திசையெல்லாம் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் மெயின் அருவியில் நேற்று முன்தினம் மாலை பெய்த கன மழையின் காரணமாக குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
தொடர்ந்து, நீர்வரத்து சீரானதை தொடர்ந்து நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கிய சூழலில், ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவிக்கு வருகை தந்து ஆனந்த குளியல் போட்டு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், மார்கழி மாதம் முதல் நாளான இன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். தமிழகம் வழியாக சபரிமலை நோக்கி செல்லும் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக குற்றால அருவிகளில் நீராடி செல்வது வழக்கம். அந்த வகையில், இன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிக்கு வருகை தந்து புனித நீராடி சென்று வருகின்றனர். இதனால் குற்றால மெயின் அருவி மற்றும் ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறு, குறு வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .