
தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் ஜார்கண்ட் மாநிலத்தின் 11வது ஆளுநராக பதவியேற்றார்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், கேபினட் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்ட விழாவில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங், சி.பி ராதாகிருஷ்ணனுக்கு (65) பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
கோயம்புத்தூரில் இருந்து இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த ராதாகிருஷ்ணன், ஜூலை 2021 முதல் ஜார்கண்ட் ஆளுநராக பணியாற்றிய ரமேஷ் பைஸுக்குப் பிறகு பதவியேற்றுள்ளார்.
முன்னதாக, ராஞ்சியில் உள்ள ராஞ்சி பிர்சா முண்டா விமான நிலையத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட மாநில ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.