டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க கோரி அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.
தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க அரசுக்கு பரிந்துரைத்தனர். மக்கள் நலன் கருதி டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றி அமைக்கவும், மதுபானம் வாங்க, விற்க உரிமம் உள்ளவர்களுக்கு மட்டும் என விதிமுறைகளை உருவாக்க வேண்டும். மதுபான விடுதிகளில் பயன்படுத்தப்படும் உணவு பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் . 21 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானம் விற்பதில்லை என உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அரசுக்கு அவர்கள் பரிந்துரைத்தனர்.