மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், புலியிடமிருந்து தனது 15 மாத மகனைக் காப்பாற்றிய ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது.
மத்தியபிரதேசம் மாநிலம் பாந்தவ்கர் புலிகள் சரணாலயத்தின் மாலா பீட் உமரியா மாவட்டத்தின் ரோஹானியா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று காலை அர்ச்சனா சௌத்ரி என்ற பெண், தனது மகன் ரவிராஜை இயற்கை உபாதை கழிப்பதற்காக வயலுக்கு அழைத்துச் சென்றபோது, காட்டிலிருந்து வந்த புலி அப்பெண்ணைத் தாக்கி குழந்தையை வாயில் கவ்விக்கொண்டது. அவர் தனது மகனைக் காப்பாற்ற முயன்றபோது, புலி அவரையும் தாக்கியது.
தனது குழந்தையை காப்பாற்ற தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட அப்பெண், வேகமாக சத்தம் எழுப்பியபடியே புலியிடம் போராடினார். இவர்களின் சத்தம் கேட்டு கிராமவாசிகள் திரண்டு அங்கு வந்தனர். இதையடுத்து, குழந்தையை விட்டுவிட்டு காட்டுக்குள் புலி ஓடிவிட்டது.
தனது மனைவிக்கு இடுப்பு, கை மற்றும் முதுகில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மகனுக்கு தலை மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போலா பிரசாத் கூறினார்.
புலியின் தாக்குதலுக்குப் பிறகு, அந்தப் பெண்ணும் குழந்தையும் உடனடியாக மன்பூரில் உள்ள சுகாதார மையத்திற்கும், பின்னர் உமாரியாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் . குழந்தை மற்றும் அவரது தாயை தாக்கிய புலியை கண்காணிக்க வனத்துறை குழு முயன்று வருகிறது. வனப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தி வருகிறார்.