
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழிப் பகுதியில் ஆண், பெண் இருவர் தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் காரில் இருந்த குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டன. போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தற்கொலை செய்தது திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி எனத்தெரியவந்தது.
கன்னியாகுமரி மாவட்டம், தேவசகாயம் மவுண்ட் பகுதியில் இன்று காலையில் சொகுசு கார் ஒன்று இருந்தது. அதற்குள் இருந்து சிறுவயது குழந்தைகளின் அழுகைச் சத்தம் கேட்டது. அப்பகுதிவாசிகள் காருக்குள் பார்த்தபோது ஆண், பெண் இருவர் இறந்த நிலையில் கிடந்தனர். இதுகுறித்து அப்பகுதிவாசிகள் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிர் இழந்தவர்கள் கடியப்பட்டிணத்தைச் சேர்ந்த சூசைநாதன், ஷாமிலி ஆகியோர் எனத் தெரிய வந்தது.இவர்கள் திருமணத்தை மீறிய தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. ஷாமிலி தன் இரு குழந்தைகளுடன் ஒரு மாதத்திற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியேறியவர்கள் தற்கொலை செய்துகொண்ட காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இருவர் இறந்த நிலையில் குழந்தைகள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.