கோயிலில் திருட வந்த கொள்ளையன் பீரோவை திறக்க முடியாமல் களைப்பில் அங்கேயே தூங்கிய ருசிகர சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை வியாசர்பாடி சர்மாநகரில் 50 ஆண்டுகள் பழமையான வெற்றி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. நேற்று பூஜை முடிந்து கோயிலை மூடிவிட்டு சென்ற பூசாரி இன்று காலை வழக்கம் கோயிலை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கோயில் பீரோவில் இருந்த துணிகள் கலைக்கப்பட்டு கீழே சிதறி கிடந்ததுடன் அங்கே ஒரு நபர் கீழே படுத்து தூங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பூசாரி கொடுத்த தகவலின் பேரில் கோயில் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் நேற்றிரவு கோயிலுக்குள் நுழைந்து, பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க உடைக்க முயற்சித்ததும், ஒரு பீரோவை உடைக்க முடியாததால் அருகிலிருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் ஏதும் இல்லாததால் துணிகளை களைத்து கீழே தள்ளியது தெரியவந்தது. மேலும் நீண்ட நேரமாக அந்த நபர் பீரோவை உடைக்க முயற்சி செய்தும் முடியாததால் களைப்பில் அவர் அங்கேயே தூங்கியது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் அந்த நபரை எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிப்பட்ட நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை போலீஸார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். கோயிலில் திருட வந்த நபர் களைப்பில் அங்கேயே தூங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.