தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த தமிழகச் சுகாதாரத்துறைத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை 3,195 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60 வயதான பெண்மணி உயிரிழந்துள்ளார்.
சென்னையில் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 138 பேர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு, 881 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாகக் கோவையில் 274 பேரும், கன்னியாகுமரியில் 251 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500 கடந்தால் அரசு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்து வந்த நிலையில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.