மக்கள் தலையில் மீண்டும் பாரம்: சமையல் எரிவாயு விலை ஆயிரத்தை தாண்டியது

மக்கள் தலையில் மீண்டும் பாரம்: சமையல் எரிவாயு விலை ஆயிரத்தை தாண்டியது

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,015க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.50 அதிகரித்த நிலையில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது ஏழை, நடுத்தர மக்களை வேதனையடைய செய்துள்ளது.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், சமையல் எரிவாயு விலையை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

இந்த வகையில், சமையல் எரிவாயு விலையை உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் காரணமாக நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உயர்த்தாமல் ஒரே நிலையில் வைத்திருந்தனர். தேர்தல் முடிந்ததும், திடீரென மார்ச் 22-ம் தேதி வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் ரூ.965.50 என விலை உயர்ந்தது. இந்த விலையில் கடந்த மாதம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையை, இன்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. இதன்படி, நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயு விலை 1,015 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதன்மூலம் ஒரே ஆண்டில் சமையல் சமையல் எரிவாயு விலை 190 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வர்த்தக சமையல் எரிவாயு விலை ரூ.102.50 அதிகரிக்கப்பட்டது. இதனால், கடந்த மாத விலையான ரூ.2,405.50ல் இருந்து ரூ.102.50 அதிகரித்து ரூ.2,508 ஆக நிர்ணயிக்கப்பட்டது. விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் நேரத்தில் சமையல் எரிவாயு விலை உயர்வால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in