கணவர் தற்கொலை செய்யவில்லை, இயற்கை மரணம்: மனைவிக்கு 52 லட்சத்தை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அதிரடி உத்தரவு

நுகர்வோர் நீதிமன்றம்
நுகர்வோர் நீதிமன்றம்

இன்சூரன்ஸ் நிறுவனம், வாடிக்கையாளரான இறந்து போனவரின் மனைவிக்கு 52 லட்சத்தை நான்கு வாரத்துக்குள்  வழங்க வேண்டும் என்று  நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி  உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நாமக்கல்  மாவட்டம், நல்லிபாளையத்தில் வசிக்கும்  சிவகாமியின் கணவர் பெரியசாமி என்பவர் கடந்த 2021  ஜனவரி மாதத்தில் இறந்துவிட்டார். அவருக்கு வழங்க வேண்டிய இன்சூரன்ஸ் பணத்தை தராததால்  சிவகாமி நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து ஆணைய உறுப்பினர் ஏ.எஸ். ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ்  இன்று தீர்ப்பு வழங்கினார். இயற்கையான மரணத்தை தற்கொலை எனக் கூறி இன்சூரன்ஸ் பணத்தை வழங்க மறுப்பது சேவை குறைபாடு என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூபாய் 50 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் பாலிசியை 2021 ஜனவரி 17-ம் தேதி  பெரியசாமி எடுத்துள்ளார். பாலிசி எடுத்து 10 நாளில் அவர் குளியல் அறையில் வழுக்கி விழுந்து  சுயநினைவை இழந்துள்ளார்.   அவர்  நாமக்கல், கோயம்புத்தூர்  தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உடல்நிலை முன்னேற்றம் இல்லாத காரணத்தால் நாமக்கல்லில் அரசு மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டார். ஆனால்  திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.

அவரது மனைவி பாலிசி தொகை 50 லட்சத்தை தமக்கு வழங்குமாறு இன்சூரன்ஸ் கம்பெனியில் விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால்  பெரியசாமி தற்கொலை செய்து கொண்டதாக இன்சூரன்ஸ் நிறுவனம் முடிவு செய்து,  பாலிசி எடுத்து ஓராண்டுக்குள் தற்கொலை செய்து கொண்டால் இன்சூரன்ஸ் தொகை வழங்க முடியாது என்று நிபந்தனை இருப்பதாக கூறி பணம் வழங்க  மறுத்துவிட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம்,  காவல்துறையினர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்து இறந்து போனவரின் மரணம் இயற்கையானது என்று தெரிவித்துள்ளனர். தடயவியல் துறையினர் இறந்து போனவரின் வயிற்றில் இருந்த உணவுப் பொருட்களில் விஷம் அல்லது ரசாயனம் கலந்த எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பே இறப்பிற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர். எனவே  பெரியசாமியின் இறப்பு இயற்கையானது என்று  தீர்ப்பளித்துள்ளது.

தங்கள் விசாரணையில் பெரியசாமி தற்கொலை செய்து கொண்டார் என்று நீதிமன்றத்தில்  இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்ததற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பதால் இன்சூரன்ஸ் நிறுவனம் பெரியசாமியின் பாலிசி தொகை 50 லட்சம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு  இழப்பீடு 2 லட்சம் ஆகியவற்றை நான்கு வார காலத்திற்குள்  அவரது மனைவிக்கு வழங்க வேண்டும் என நாமக்கல்  நுகர்வோர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in