காங்கிரஸ் எம்எல்ஏ டிராக்டர் மோதி சிறுவன் பலி: வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த சோகம்

காங்கிரஸ் எம்எல்ஏ டிராக்டர் மோதி சிறுவன் பலி: வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த சோகம்

தென்காசி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பழனிக்குச் சொந்தமான டிராக்டர் மோதி வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் கீழ சுரண்டை பகுதியில் உள்ள குளங்களில் அதிகமான அளவில் சரல் மண் வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கிருந்து தென்காசி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனிக்குச் சொந்தமான சேம்பர் குவாரிக்கு அதிக அளவில் மண் கொண்டு செல்லப்படுகிறது.

அவ்வாறு மணல் ஏற்றிச் சென்ற சட்டப்பேரவை உறுப்பினர் பழனிக்குச் சொந்தமான டிராக்டர் , கீழ சுரண்டை பிள்ளையார் கோயில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீஸார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்திய போது பலியானாது சுரண்டை பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த ராஜதுரை மகன் ராஜமுகன்(4) என்பது தெரிய வந்தது. பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடலை தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in