என் புடவையை ஏன் கட்டினாய்?; அதட்டிய அக்கா: ரயின் முன் பாய்ந்து தற்கொலை செய்த தங்கை

என் புடவையை ஏன் கட்டினாய்?; அதட்டிய அக்கா: ரயின் முன் பாய்ந்து தற்கொலை செய்த தங்கை

கல்லூரி விழாவில் கலந்து கொள்வதற்காக அக்காவின் புடவையை அணிந்து சென்ற தங்கையைக் கண்டித்ததால் அவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அடுத்துள்ள திருக்கச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் நிரோஷா(20). இவர் பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பிஎஸ்சி நர்ஸிங் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் ரயில் மூலம் கல்லூரிக்குச் சென்று வரும் இவர், வழக்கம் போல நேற்று காலை கல்லூரி செல்வதற்கு ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது திடீரென சென்னை கடற்கரை செல்லும் விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த ரயில்வே போலீஸார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ‘கல்லூரியில் நடந்த இறுதியாண்டு கலைநிகழ்ச்சியில் நிரோஷா கலந்து கொண்டு நடனமாடியுள்ளார். அந்த விழாவில் கலந்து கொள்வதற்காகத் தனது அக்கா பவித்ராவின் புடவையை உடுத்திச்சென்றுள்ளார். இதையடுத்து என்னுடைய புடைவையை ஏன் கட்டினாய் என பவித்ரா திட்டியுள்ளார். இதனால் அப்போதிலிருந்து சாப்பிடாமலே இருந்துள்ள நிரோஷாவை அவரது தந்தை சமாதானம் செய்துள்ளார். இதனையடுத்து கல்லூரி செல்வதற்காக நிரோஷாவை அவரது தந்தை நேற்று காலை இருசக்கர வாகனத்தில் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையத்திற்குக் கொண்டுவந்து விட்டுச்சென்றுள்ளார். அக்கா திட்டியதால் மன உளைச்சலில் இருந்த நிரோஷா ரயில் வரும் போது திடீரென தண்டவாளம் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் ’ எனத் தெரியவந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in