தோழியின் திருமண வரவேற்பு விழாவில் நடனமாடியபோது மயங்கி விழுந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சத்யசாய்ரெட்டி(21). இவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்றிரவு கோயம்பேட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற தோழி சசோதரியின் திருமண வரவேற்பு விழாவில் நண்பர்களுடன் சத்யசாய் கலந்துகொண்டு, அங்கு நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் நடனமாடியுள்ளார். அப்போது திடீரென அவரது காதில் இருந்து ரத்தம் வழிந்து வந்ததைப் பார்த்து நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சத்யசாய் கதறியபடி மயக்கம் போட்டு விழுந்ததால் உடனடியாக அவரை மீட்டு அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு, வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவல்படி, கோயம்பேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சத்யசாய் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர் சத்யசாய்ரெட்டிக்கு ஏற்கெனவே வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வெகுநேரமாக நடனமாடியதால் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.