சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரியை மணக்கிறார் ஆலப்புழா பெண் ஆட்சியர்!

சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரியை மணக்கிறார் ஆலப்புழா பெண் ஆட்சியர்!

கேரளத்தின் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் ரேணுராஜ், பத்திரிகையாளர் மரணத்தில் சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கிடராமனை திருமணம் செய்ய உள்ளார். ஸ்ரீராம் வெங்கிடராமன் குடித்துவிட்டு, பெண் தோழியோடு காரில் மிதமிஞ்சிய வேகத்தில் சென்றதில் பைக்கில் வந்த பஷீர் என்ற பத்திரிகையாளர் மீது மோதியதாக புகார் உள்ளது. இதில் பஷீர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவ்வழக்கில் சிறிதுகாலம் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டவர் ஸ்ரீராம் வெங்கிடராமன்!

ஸ்ரீராம் வெங்கிடராமன்
ஸ்ரீராம் வெங்கிடராமன்

அந்த வழக்கில் இருந்து மீண்டுவந்த ஸ்ரீராம் வெங்கிடராமன் இப்போது, கேரள மாநில சுகாதாரத்துறை இணை இயக்குநராக உள்ளார். இவருக்கும் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் ரேணு ராஜுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும் ஞாயிற்றுக்கிழமை சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் வைத்து நடக்கிறது. தம்பதிகள் இருவருமே மருத்துவம் படித்துவிட்டு குடிமைப்பணிக்கு வந்தவர்கள்.

கடந்த 2012-ம் ஆண்டு ஸ்ரீராம் வெங்கிடராமன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் தேர்வு பெற்றார். சிறிதுகாலம் தேவிகுளம் சார் ஆட்சியராகவும் இருந்தார். ரேணுராஜ் கடந்த 2014-ம் ஆண்டு குடிமைப்பணிக்குத் தேர்வானவர் ஆவார். கோட்டயத்தை பூர்வீகமாகக் கொண்ட ரேணுராஜ், இதற்குமுன்பு திருச்சூரில் சார் ஆட்சியராக இருந்தார். இவரும் தேவிகுளத்தில் சார் ஆட்சியராக இருந்தவர்தான். அப்போது ரேணுராஜ், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் மிகவும் பரவலாக கவனம் ஈர்த்தது.

கடந்த 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 3-ம் தேதியன்று, குடிபோதையில் கார் ஓட்டிவந்த ஸ்ரீராம் வெங்கிடராமனின் கார் மோதி, பத்திரிகையாளர் பஷீர் என்பவர் உயிர் இழந்தார். அப்போது காரில் ஸ்ரீராம் வெங்கிடராமனுடன், அவரது பெண் தோழி வாபா பெரோஸும் இருந்தார். அந்தக் கார் வாபா பெரோஸுக்கு சொந்தமானது. இந்த சம்பவம் கேரளத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, பத்திரிகையாளர்களையும் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தது. இருந்தும் காரை ஓட்டியது ஸ்ரீராம் வெங்கிடராமனா? அவரது தோழி வாபா பெரோஸோ என இன்றும் இருவேறு கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த விபத்து சம்பவத்தின்போது, திருவனந்தபுரத்தில் நில அளவைத்துறை இயக்குனராக இருந்தார் ஸ்ரீராம் வெங்கிடராமன். அவர் பதவியேற்று இரண்டே நாளில் நடந்த இந்த சம்பவம் கடும் அதிர்வை உருவாக்கியது. அந்தவகையில் சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கிடராமனுக்கும், ஆலப்புழா ஆட்சியர் ரேணுராஜுக்கும் திருமணம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in