
கோவை குற்றாலம் சுற்றுலா நுழைவு கட்டணத்தில் மோசடியில் ஈடுபட்ட வனவர் ராஜேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை ஆலந்துறை அடுத்த சாடிவயல் பகுதியில் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கோவை குற்றால அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த அருவிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இதில், தீபாவளி, வார விடுமுறை நாட்கள், பொங்கல் உள்ளிட்ட நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு வருவர். போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அமைந்துள்ளதால், சூழல் சுற்றுலாவை மேம்படுத்த கோவை குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.60, குழந்தைகளுக்கு ரூ.30, இருசக்கர வாகனம் நிறுத்த ரூ.20, கார்கள் நிறுத்த ரூ.50 கட்டணமாக வனத்துறை வசூலித்து வருகிறது.
இந்த நிலையில், இக்கட்டண வசூலில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. நுழைவு சீட்டுகள் வழங்கும் இடத்தில் 2 மெஷின்களில் நுழைவு கட்டண சீட்டை அச்சிட்டு பணத்தை பெறுவதும், இதில், ஒரு மெஷினில் பதிவு செய்யப்படும் சுற்றுலாப்பயணிகளின் தொகை மட்டும் அரசுக்கு செலுத்தி வந்துள்ளனர். மற்றொரு மெஷினில் போலி ரசீது தயார் செய்து பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து வனத்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வனவர் ராஜேஷ் குமார் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் இன்று பணியிடை நீக்கம் செய்தார். மேலும், வனவர் ராஜேஷ் குமாரிடம் இருந்து ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.