கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி சேர்ந்தவர் டெனிஸ்குமார். இவர் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார் மாணவர் டெனிஸ்குமார். இந்த நிலையில் நேற்று மாலை சக மாணவர்கள் வகுப்பு முடிந்து விடுதிக்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது விடுதி அறைய திறந்தபோது மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வடவள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, டெனிஸ்குமாரின் தாய் உயிரிழந்த சோகத்தில் அவர் காணப்பட்டதாகவும், இதனால் வேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.