தீக்குளித்து 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை: பள்ளி கொடுத்த அழுத்தம் காரணமா?

தீக்குளித்து 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை:  பள்ளி  கொடுத்த அழுத்தம் காரணமா?

மன அழுத்தம் காரணமாக ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துதற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் திருவள்ளூர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். எல்லைப் பாதுகாப்புப் படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா. இவர்களது மகன் சஞ்சய் பேரளத்தில் உள்ள சங்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். வெங்கடேஷ் 15 நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் சஞ்சய் நேற்று வீட்டில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்று தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி சென்ற பெற்றோர், சஞ்சயை மீட்டு உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பேரளம் காவல் நிலையத்தில் வெங்கடேசன் புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர் சஞ்சய் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு முடிந்த உடன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாணவரின் பெற்றோர் தரப்பில் கூறப்படுவதாவது., "இரண்டாவது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெரும் அளவிற்கு சஞ்சய் நன்றாக படிக்கக் கூடியவர். ஆனாலும் பள்ளியில் சஞ்சய்க்கு அதிக எழுத்துப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். மேலும் மற்ற மாணவர்களைப் பள்ளியில் ஆசிரியர்கள் அடிப்பதாகவும் இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுவதாகவும் கூறி வந்தார். அதனால் தன்னை வேறு பள்ளிக்கு மாற்றுமாறு அடிக்கடி கூறியிருக்கிறார். அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் மாணவன் இப்படி செய்து கொண்டு விட்டார் என்று கூறுகிறார்கள்.

இது குறித்து பள்ளி தரப்பில் "மாணவர் ஒன்பதாம் வகுப்புதான் படிக்கிறார். ஆகையால் அவருக்கு எந்தவித எழுத்து பயிற்சியோ, மன அழுத்தமோ பள்ளி தரப்பில் இருந்து கொடுக்கப்படவில்லை" என்று தெரிவிக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in