காலையில் பள்ளிக்கூடம்; மாலையில் ஒர்க்‌ஷாப்பில் வேலை: மின்சாரம் தாக்கி பறிபோன மாணவனின் உயிர்

காலையில் பள்ளிக்கூடம்; மாலையில் ஒர்க்‌ஷாப்பில் வேலை: மின்சாரம் தாக்கி பறிபோன மாணவனின் உயிர்

தூத்துக்குடி மாவட்டத்தில் பகுதிநேரமாக ஒர்க்‌ஷாப் ஒன்றில் வேலை செய்து வந்த 9-ம் வகுப்பு மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பால்ராஜ்(24). இவர் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சாலையில் சொந்தமாக டிங்கரிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவரது ஒர்க்‌ஷாப்பில் அதேபகுதியைச் சேர்ந்த கர்ணமகாராஜன் என்பவரது மகன் குருமூர்த்தி(15) என்பவர் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார்.

குருமூர்த்தி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்துவந்தார். இன்று பள்ளி முடிந்து பணிக்குவந்த குருமூர்த்தி மின்சார சுவிட்ச் பெட்டியை காலால் மிதித்ததில் மின்சாரம் தாக்கியது. இதைப் பார்த்த பால்ராஜ், குருமூர்த்தியைக் காப்பாற்றும் நோக்கத்தில் மின் ஒயரை இழுத்தார். இதில் பால்ராஜுக்கும் கடும் காயம் ஏற்பட்டது.

அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்போது மாணவன் குருமூர்த்தி மின்சாரம் தாக்கி உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒர்க்‌ஷாப் உரிமையாளர் பால்ராஜுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in