அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவனை போலீஸார் போக்சோவில் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து அவரது பெற்றோர் அந்த மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவியிடம் பெற்றோர் விசாரணை மேற்கொண்டதில் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் மாணவனை நேற்று கைது செய்து திருச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். மேலும், மாணவி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.