வீசியது காதல் கடிதம் அல்ல, துண்டுச்சீட்டு; கொடூரமாக கொல்லப்பட்ட மாணவன்: மாணவியின் தவறால் நடந்த விபரீதம்

வீசியது காதல் கடிதம் அல்ல, துண்டுச்சீட்டு; கொடூரமாக கொல்லப்பட்ட மாணவன்: மாணவியின் தவறால் நடந்த விபரீதம்

துண்டுச்சீட்டை காதல் கடிதம் என நினைத்து 5-ம் வகுப்பு மாணவனை சக மாணவியின் சகோதரர்கள் கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்ற கொடூர சம்பவம் பிஹாரில் நடந்துள்ளது.

பிஹாரில் கடந்த 17-ம் தேதி தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த சிறுவனின் உடல் பாகங்களை போலீஸா மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, கொலை செய்யப்பட்ட சிறுவன் உத்வந்த்நகரை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தயாகுமார் என்று தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 4 சிறுவர்கள் மற்றும் மாணவியின் குடும்பத்தினர் என மொத்தம் 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட மாணவன் தயாகுமார் கடந்த 13-ம் தேதி தன் சகோதரியுடன் பள்ளிக்கு சென்றிருக்கிறார். அன்று மாணவனின் சகோதரி வகுப்பறையில் தேர்வு எழுதி கொண்டிருக்கும்போது தேர்வு துண்டுச்சீட்டு ஒன்றை தன் சகோதரி மேல் வீசி இருக்கிறான். ஆனால் அந்த துண்டுச்சீட்டு தவறுதலாக வேறொரு மாணவிக்கு அருகில் விழுந்து இருக்கிறது. இதனை அந்த மாணவி காதல் கடிதம் என்று தவறாக நினைத்துக் கொண்டு தன்னுடைய சகோதரர்களிடம் கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து மாணவியின் சகோதரர்கள் பள்ளிக்கு வந்து மாணவனை கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து மாணவனின் தாயார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மாணவனை தேடிய நிலையில் நான்கு நாட்களுக்குப் பிறகு மாணவனின் உடல் பாகங்கள் தண்டவாளத்தில் மீட்கப்பட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 பேர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்களை காவல்துறை சிறையில் அடைத்தனர். பிஹாரில் 5-ம் வகுப்பு மாணவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in