300-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படமெடுத்ததாக இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் சினிமா நிறுவனத்தில் இளம் பெண்களை நடிகையாக்குவதாகக் கூறி ஆபாசப் படங்கள், வீடியோக்கள் எடுத்ததாகச் சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்த இயக்குநர் வேல்சத்ரியன்(38), அவரது பெண் உதவியாளர் ஜெயஜோதி(23) ஆகியோரை சூரமங்கலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினர் அந்த சினிமா நிறுவனத்தில் நடத்திய சோதனையில் 30க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்குகள், கம்ப்யூட்டர், லேட்டாப், கேமரா, பென்டிரைவ் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஹார்டு டிஸ்குகளை காவல்துறையினர் சோதனை செய்தபோது, அதில் 300-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசப் படங்கள் இருப்பதாகவும், அந்தப் பெண்களை மோசமாகப் படமெடுத்து மிரட்டிச் சீரழித்ததும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. படத்தில் உள்ள பெண்களிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். வேல்சத்ரியனிடம் கைப்பற்றப்பட்ட கேமராவில் பெண்களின் அரை நிர்வாண படங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஹார்டு டிஸ்குகளில் உள்ள படங்கள் ஏதாவது அழிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யவும், அழிக்கப்பட்ட படங்களை மீட்டெடுக்கவும் சைபர் க்ரைம் காவல்துறைக்கு அந்த ஹார்ட் டிஸ்குகள் அனுப்பப்பட்டுள்ளன.
வேல்சத்ரியனிடம் 150 ஆண்கள், 250 இளம் பெண்கள் என சுமார் 400க்கும் மேற்பட்டவர்களிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு பயோ டேட்டா கொடுத்திருக்கிறார்கள். அதனை காவல்துறையினர் கைப்பற்றி இருக்கிறார்கள். பயோ டேட்டா கொடுத்தவர்களிடம் வேல்சத்ரியன் பண வசூலும் நடத்தியிருக்கிறார். பயோடேட்டா கொடுத்தவர்களை அழைத்து, அவர்களிடம் விசாரணை செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை நேற்று காவல்துறையினர் வரவழைத்து விசாரணை நடத்தினர். மேலும் அவரிடமிருந்து புகார் மனு பெறப்பட்டுள்ளது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் பெண்களிடம் செல்போனில் பேசி மயக்கும் ஆடியோ தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வேல்சத்ரியன் மற்றும் ஜெயஜோதி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.