
சென்னையில் மகளிர் தினத்தையொட்டி மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், காவலர்களுக்கு திருக்குறள் உள்ளிட்ட புத்தகங்களைப் பரிசாக வழங்கினார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் பணியில் இருந்த மகளிர் காவலர்களை சந்தித்து அவர்களுக்கு திருக்குறள் உள்ளிட்ட புத்தகங்களைப் பரிசாக வழங்கி மகளிர் தின வாழ்த்துகள் கூறினார். அத்துடன் மகளிர் காவலர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முதல்வர் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆய்வாளர் தெய்வநாயகி," மகளிர் தினத்தில் முதலமைச்சர், எங்கள் காவல் நிலையத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து எங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். முதலமைச்சர் காவல் நிலையத்துக்கு வந்தது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. மேலும் பணியில் இருந்த காவலர்களுக்கு திருக்குறள் உள்ளிட்ட புத்தகங்களைப் பரிசாக கொடுத்து மகளிர் தினவாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும், காவல் நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்" என்றார்.
இந்நிகழ்வில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.