
சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மூன்று லட்ச ரூபாய் நிவாரண உதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆலையில் எதிர்பாராமல் நடந்த வெடி விபத்தில் அங்கு பணிபுரிந்த சுப்புராஜ் மகன் குமரேசன், ராமகிருஷ்ணன் மகன் சுந்தர்ராஜ், கருப்பையா மனைவி அய்யம்மாள் ஆகிய மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், 'வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள துயரமான செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். மேலும் விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருளாகி என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்ச ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருளாயிக்கு 50 ஆயிரம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.