
நாட்டின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை கூறியுள்ளார்.
சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "தற்போதைய யுகம், உலகமயமாக்கலால் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், உலகளவில் உள்ள ஏராளமான சட்ட சவால்களை எதிர்கொள்ளும் வகையில், அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு, வழக்கறிஞர்கள் முன்வர வேண்டும்.
சட்ட உரிமைகள், கட்டுப்பாடுகளை நிலைநிறுத்தும் அதே நேரத்தில், மாறி வரும் யுகத்துக்கு ஏற்ப, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்துவதற்கு வழக்கறிஞர்கள் தயாராக வேண்டும்.
சைபர் குற்றங்கள், தகவல் பாதுகாப்பு, அறிவுசார் சொத்து உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மனுதாரர்களின் நலன் பாதுகாக்கப்படுவதுடன், நாட்டின் நலன், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய நிலையில் வழக்கறிஞர்கள் உள்ளனர்" என்றார்.