சிதம்பரத்தின் 'மெர்சல்’ டாக்டர் மாரடைப்பால் மரணம்

மருத்துவர் அசோகன்
மருத்துவர் அசோகன்

சிதம்பரத்தின் மக்கள் மருத்துவர் அசோகன் மாரடைப்பால் மரணடைந்த செய்தி அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

'மெர்சல்' படம் வந்து ஐந்து ரூபாய், பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவ சேவை செய்த மருத்துவர்களை இந்த உலகிற்கு அடையாளம் காட்டியது. ஆனால் அவர்களை எல்லாம் தாண்டிய ஒரு மனிதர் என்று மருத்துவர் என்றால் அசோகனை சொல்ல வேண்டும்.
சிதம்பரம் எஸ்.பி கோயில் தெருவில் இருக்கும் அதை ஒரு மருத்துவமனை என்று சொல்ல முடியாது. ஒரு விடுதியில் பின் பக்கத்தில் உள்ள ஒரு பெரிய ஹால். அதில் சில இடங்களில் மரத்தெடுப்புகள் , அதில் மர சட்டங்களால் ஆன பெஞ்சுகள், அங்கங்கே குளுக்கோஸ் பாட்டில் போடுவதற்கான ஸ்டாண்டுகள். இவைதான் மருத்துவர் அசோகனின் மருத்துவமனையின் அடையாளம்.

டோக்கன் கொடுப்பவர் என்று யாருமில்லை. முன்னால் வருகிறவர்கள் மருத்துவருக்கு முன்னே சென்று நின்றுகொள்ள, அடுத்தடுத்து வருபவர்கள் அவருக்குப் பின்னால் நின்று கொள்ள வேண்டும். அதுவே வரிசையாகி விடுகிறது. மருத்துவருக்கு நெருக்கமானவர்களாக காட்டிக் கொள்ளும் சிலர் நேரடியாகவே மருத்துவரிடம் சென்று உட்கார்ந்து கொள்கிறார்கள். மருத்துவருக்கு தனி அறை இல்லை. அவரைச் சுற்றி 10 பேராவது நின்று கொண்டிருப்பார்கள்.

கசங்கிய, சுருங்கிய சட்டை பேண்ட் அணிந்திருப்பார். கழுத்தில் கையில் என்று உடலில் எந்த அணிகலனும் இல்லை. கழுத்தில் ஸ்டெதாஸ்கோப். என்ன செய்கிறது என்று கேட்டு ஸ்டெதாஸ்கோப் வைத்து பார்ப்பார். அங்கேயே ஒன்று அல்லது இரண்டு ஊசி போடப்படுகிறது. மருந்து எழுதித் தந்து வாங்கிக் கொள்ளச் சொல்கிறார். தேவையானவர்களுக்கு குளுக்கோஸ் பாட்டில் போடப்படுகிறது. இத்தனைக்கும் சேர்த்து வெறும் 40 ரூபாய் கட்டணமாக வாங்கிக் கொள்வார்.

நரிக்குறவர் மக்கள், மற்றும் பட்டியல் இன மக்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கே சென்று பார்ப்பார். மருந்து சீட்டு எழுதித் தருவார். அவர் செலவில் மருந்துக் கடையில் வாங்கிக் கொள்ளலாம். அங்கே அவர்களுக்கு டீ தரப்படுகிறது. மாலை வரை ஓய்வு எடுக்கிறார்கள். மாலையில் ஒரு ஊசி போடுவார். சரியானதும் வீட்டுக்கு அனுப்பி வைப்பார். அவர்கள் கட்டணம் ஏதும் தருவதில்லை. இவரும் கேட்டதில்லை.

இப்படி ஏழைகளின் மருத்துவராக இருந்த அவர் டெங்கு பரவல் மிகத் தீவிரமாக இருந்த காலகட்டத்திலும் சரி, கரோனா தொற்று உலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருந்த காலகட்டத்திலும் சரி, எதற்காகவும் தன்னுடைய மருத்துவ சேவையை நிறுத்திக் கொள்ளவில்லை. அப்போதும் அதே அளவு கூட்டம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் வேறு எங்கும் மருத்துவர்கள் பார்க்காததால் வழக்கத்தை விட மிக அதிகமான கூட்டம் வந்தது. அத்தனை பேரையும் வெறும் 40 ரூபாய் வாங்கிக் கொண்டு குணமாக்கிய மருத்துவ கடவுள் அவர்.

கரோனா பரவலால் உலகம் முடங்கி கிடந்தபோது, மருத்துவர் அசோகன் எந்த அச்சமும் இன்றி காய்ச்சல் நோயாளிகளை பரிசோதித்து மருத்துவம் செய்தார். அப்படிப்பட்ட மனிதர் தன்னைப் பராமரித்துக் கொள்வதில் கோட்டை விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரையிலும் மருத்துவ சேவையாற்றிக் கொண்டேயிருந்தார். அங்கு பதினைந்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு மூன்று வேளை உணவும் சம்பளமும் கொடுத்தார். அங்கே தெருநாய்கள் அதிகமிருந்தது, பூனைகள் பத்துக்கும் மேல் இருந்தன. அந்த விலங்கினங்களுக்கு தனியாக உணவு சமைக்கப்பட்டு வழங்கியதையும் கவனிக்க நேர்ந்தது.

பத்துக்கு மேற்பட்ட தவணைக்காரர்கள் வருவார்கள். அவர்களிடம் தவணை வாங்கித்தான் அந்த செலவை எல்லாம் அவர் செய்து கொண்டிருந்தார். இப்படி மக்கள் நேயராக, மற்ற உயிரினங்களை நேசிப்பவராக வாழ்ந்த மருத்துவர் அசோகன் நேற்று மதியம் 2 மணி வரையிலும் மருத்துவ சேவையாற்றி இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட உணவு ஒவ்வாமையாகி வாந்தியும், வயிற்றுப்போக்குமாக இருந்துள்ளது.

அதையும் பொறுத்துக் கொண்டு மருத்துவ சேவையாற்றிய அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று மாலை மரணடைந்தார். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் தங்கள் மருத்துவக் கடவுளை இழந்திருக்கிறார்கள் என்று நான் சொல்ல வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in