ஐ.பி.எஸ் அதிகாரி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சய் அரோரா தற்போது டெல்லி காவல் ஆணையராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமாக விருகம்பாக்கம் நடேசன் நகர் தயிஷா குடியிருப்பில் வீடு ஒன்று உள்ளது. இவரது வீட்டில் மதுசூதன ரெட்டி(69) என்பவர் கடந்த நான்கு வருடமாக குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த தொழிலதிபர் மதுசூதன ரெட்டிக்கு திருமணமாகி பத்மாவதி என்ற மனைவியும், பூர்ணிமா ரெட்டி என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு மதுசூதனரெட்டி 14-வது மாடி பால்கனியிலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக விருகம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விருகம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மதுசூதன ரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மதுசூதன ரெட்டி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.