சென்னையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் முக்கியத் தலைவர்களின் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி சோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சுமார் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் 8 கிளை அமைப்புகள் சட்டவிரோதமானவை எனக் கடந்த 27-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
மேலும் அந்த அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு என பல்வேறு வகையில் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் இந்த அமைப்புகள் செயல்படுவதாக என்ஐஏ தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிஎஃப்ஐ அலுவலகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் இந்த அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.