மின்னல் வேகத்தில் வந்த கார்; பிரேக் பிடிக்காததால் தூக்கிவீசப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர், 6 பேர்: சென்னையில் பயங்கரம்

விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் காயம்
விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் காயம் மின்னல் வேகத்தில் வந்த கார்; பிரேக் பிடிக்காததால் தூக்கிவீசப்பட்ட 7 பேர்: சென்னையில் பயங்கரம்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த கார் பிரேக் பிடிக்காததால் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே வண்ணாரப்பேட்டை உதவி ஆய்வாளர் அன்புதாசன் உள்ளிட்ட காவலர்கள் நேற்றிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி மேம்பாலத்தில் இருந்து அதிவேகமாக கார் ஒன்று வந்துள்ளது. அப்போது, காவலர்கள் காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது கார் நிற்காமல் வேகமாக வந்து தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் மற்றும் சாலையில் நடந்து சென்ற பெண்கள் உட்பட 7 பேர் மீது மோதிவிட்டு பின்னர் அருகில் இருந்த கம்பத்தில் மோதி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய கார்
விபத்தை ஏற்படுத்திய கார்

உடனே அருகிலிருந்த பொதுமக்கள் காயமடைந்த உதவி ஆய்வாளர் அன்புதாசன்(28), சுமையா(19), நான்சி (12), சாய்னா(38), ஆபிதா(65), ஜூலி(38), சதாம் உசேன்(30) ஆகிய 7 பேரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்ற கார் ஒட்டுநரை பொதுமக்கள் மடக்கி பிடித்து வைத்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீஸார் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை பிடித்து நடத்திய விசாரணையில் பழைய வண்ணாரப்பேட்டை வீரபதிசெட்டி தோட்டத்தை சேர்ந்த மோகன்(40) என்பதும், இவர் தனது குடும்பத்துடன் திருத்தணி கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது, திடீரென காரின் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மோகனை போலீஸார் கைது செய்து, அவர் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவாக செயல்படுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in