ஆன்லைனில் பகுதி நேர வேலை; ஆசையை தூண்டிய பெண்: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சென்னை ஐடி ஊழியர்

ஆன்லைனில் பகுதி நேர வேலை; ஆசையை தூண்டிய பெண்: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சென்னை ஐடி ஊழியர்

உலக முழுவதும் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளுக்கு செல்லாமலே ரேட்டிங் கொடுத்தால் பணம் வரும் என கூறி பகுதிநேர வேலை பார்க்கும் நபர்கள் இருப்பது போல் போலி வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி ஒரு வாரத்தில் ஐடி ஊழியரிடம் 16 லட்ச ரூபாயை கும்பல் ஒன்று பறித்துள்ளன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் குமார். ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவர் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஆன்லைன் பகுதி நேர வேலை எனக்கூறி சுமார் 16 லட்சம் ரூபாயை வட மாநில கும்பல் ஒன்று மோசடி செய்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

டெலிகிராம் மூலமாக பகுதி நேர வேலை உள்ளதாக தொடர்ந்து பல்வேறு குறுஞ்செய்திகள் குமார் செல்போனுக்கு வந்த வண்ணம் இருந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் கார்ப்பரேட் டிராவல் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்திற்காக செயல்படும் உப நிறுவனம் ஒன்றில் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக வந்த குறுஞ்செய்தி குறித்து விசாரித்த போது பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால் உலகத்தில் உள்ள பல்வேறு ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளுக்கு ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் பணம் தருவதாக தெரிவித்ததுடன் இதற்கான லிங்க் ஒன்றை அனுப்பி அதில் தங்களது விவரங்களையும் ஆவணங்களையும் பதிவு செய்யுமாறு கூறியுள்ளனர்.

குமார் தனது ஆவணங்களை வாட்ஸ் அப் மூலம் யாருக்கும் அனுப்ப முடியாது என எச்சரிக்கையாக இருந்துள்ளார். இருப்பினும் நிறுவனத்தைப் பற்றி ஆன்லைனில் ஆய்வு செய்த போது கார்ப்பரேட் டிராவல்ஸ் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் சர்வதேச நிறுவனம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் அனுப்பிய லிங்க்கில் அனைத்து தகவல்களையும் பதிவிட்டு உறுப்பினராக சேர்ந்துள்ளார். முதற்கட்டமாக உறுப்பினர் ஆனவுடன் குமாரின் வங்கி கணக்கிற்கு 10 ஆயிரம் ரூபாயை அந்நிறுவனம் அனுப்பி இந்த பணத்தை பெறுவதற்கு 30 ஹோட்டல்களுக்கு ரேட்டிங் கொடுத்து தங்களது வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் பத்தாயிரம் ரூபாய் பணம் குமாருக்கு கிடைத்தது. தொடர்ந்து அடுத்தடுத்து அசைன்மென்ட் கிடைக்க பத்தாயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறாக முப்பதாயிரம் ரூபாய் செலுத்தி அவர்கள் கூறியது போல் ரேட்டிங் கொடுத்து 24 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளார். பின்னர் பகுதி நேர வேலை செய்யும் நபர்களை இணைத்து ஒரு வாட்ஸ்அப் குழுவையும் அந்த நிறுவனம் உருவாக்கியது. அதில் பலரும் தினம் தான் இவ்வளவு பணம் சம்பாதித்ததாக ஸ்கிரீன் ஷாட் போடுவதைக் கண்டு குமார் தீவிரமாக இந்த பணியில் செயல்பட ஆரம்பித்துள்ளார்.

மேலும் பெங்களூருவை சேர்ந்த யாழினி என்ற பெண் தானாக வந்து வாட்ஸ்அப் மூலம் நட்பாக பழகி பேசியதுடன் தானும் பகுதி நேர வேலை பார்ப்பதாக கூறி நம்ப வைத்துள்ளார். இதனை நம்பி குமார் தீவிரமாக வேலை பார்க்க தொடங்கிய பின்னர் அந்நிறுவனம் பிரீமியம் உறுப்பினராக மாற வேண்டுமென்றால் அதிக பணம் செலுத்த வேண்டும் என்றும் பிரீமியம் உறுப்பினரானால் அதிக கமிஷன் கிடைக்கும், கேட்கும் பணத்தை செலுத்தினால் மட்டுமே அடுத்தடுத்து பணம் சம்பாதிக்க நிறுவனம் அனுமதிக்கும் என தெரிவித்துள்ளனர். அதை நம்பி குமார் முதற்கட்டமாக ஒரு லட்ச ரூபாய் பணம் செலுத்தி தொடர்ந்து ஹோட்டல்களுக்கு ரேட்டிங் கொடுத்து பணம் சம்பாதித்ததாக தெரிவித்துள்ளார். தொடர்சசியாக பணம் வர ஆரம்பித்ததால் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்ல லிங்க் மூலம் பணம் செலுத்துமாறு நிறுவனம் தெரிவித்தது. உடனே குமார் 3 லட்சம் பணத்தை செலுத்தி தொடர்ச்சியாக வேலை செய்து வந்த நிலையில் 13 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்தி அப்கிரேட் செய்து கொண்டால் அதிகளவு கமிஷன் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த குமார் ஒரு கட்டத்தில் கடன் வாங்கியாவது முதலீடு செய்து மொத்த பணத்தையும் சம்பாதித்து விடலாம் என நினைத்த நேரத்தில் யாழினி 4 லட்ச ரூபாய் கடன் தருவதாகவும் மீதி பணத்தை வங்கி மூலம் கடன் வாங்கி செலுத்துமாறு கூறியுள்ளார்.

தன்னைப் போன்று பகுதி நேர வேலை பார்க்கும் பெண் 4 லட்ச ரூபாய் கொடுத்து உதவி செய்ய முன்வந்ததை எண்ணிய குமார் விட்ட பணத்தை எப்படியாவது பிடித்து விடலாம் என்ற ஆசையில் வங்கியில் கடன் வாங்கி செயலியில் 13 லட்ச ரூபாய் செலுத்தியுள்ளார்.

மீண்டும் அப்கிரேட் செய்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என கூறியதால் சந்தேகமடைந்து உடனே சம்பந்தப்பட்ட நிறுவன நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போது பதில் அளிக்காமல் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இதே நிறுவனத்தில் பகுதி நேர வேலை பார்த்து நட்பாக பழகிய யாழினியை தொடர்பு கொண்டு பேசும்போது ஹிந்தியில் பேசியதால் மேலும் சந்தேகம் வலுத்ததுடன் அவர் கடனாக கொடுத்த 4 லட்சம் ரூபாய் பணத்தை நேரடியாக தன் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் அந்த நிறுவனத்தின் கணக்கில் பணத்தை செலுத்தியதும் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.

பின்பு விசாரணை செய்ததில் உண்மையாக கார்ப்பரேட் டிராவல் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் செயல்படும் சர்வதேச நிறுவனத்தை போல் போலியாக ஆன்லைனில் நிறுவனம் உருவாக்கி மோசடி செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். தன்னை நம்ப வைப்பதற்காக வாட்ஸ்அப் குரூப்பில் இணைத்து பலர் அதிகம் சம்பாதிப்பது போல் பதிவை போட வைத்துள்ளதும், மேலும் பெண் ஒருவரை நட்பாக பழக வைத்து மோசடியில் இருந்து தப்பிக்காமல் தொடர்ந்து பணம் செலுத்த வைத்ததும் தெரியவந்தது. கடந்த ஒரு வாரத்தில் குமார் 16 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் அனைத்து நபர்களும் டெலிகிராம், வாட்ஸ் அப் மூலமாக ஆன்லைனில் மட்டுமே பேசி மோசடி செய்ததாகவும் இந்த மோசடியில் ஈடுபட்டு வரும் வடமாநில கும்பலிடம் தான் இழந்த பணத்தை மீட்டு தருமாறு குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவில் அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது இந்தியா முழுவதும் பலர் இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கத்தில் அதிக ஃபாலோவர்கள் மற்றும் லைக்குகள் கொடுத்தால் பணம் கிடைக்கும் என ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட வடமாநில கும்பல் தற்பொழுது ரேட்டிங் அளித்தால் பணம் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in