போலி பத்திரப்பதிவு சட்டத்திருத்தம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு!

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் போலி பத்திரப்பதிவு ரத்து, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்க, தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

சென்னை சோளிங்கநல்லூரை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி என்பவருக்கு சொந்தமாக 2,400 சதுர அடி வீட்டுமனை உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் இறந்த நிலையில், ஏழு மாதங்களுக்கு பிறகு, போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து, அந்த நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர்.

இந்த விவகாரம், சலபதியின் வாரிசுகளுக்கு தெரிய வந்ததை அடுத்து, சென்னை தெற்கு மாவட்ட பதிவாளரிடம் அவர்கள் புகார் அளித்தனர்.

இதற்கிடையே தமிழகத்தில் ’போலி பத்திரப்பதிவு குறித்து புகார் வந்தால் அதை விசாரித்து, அவை போலி என்பது கண்டறிப்பட்டால் அந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய, பதிவு அதிகாரிக்கு உத்தரவிட மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி’ சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தது.

கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்த இந்த சட்டத்திருத்ததின் கீழ், சலபதியின் வாரிசுகள் மீண்டும் புகார் அளித்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், போலி பொது அதிகார பத்திரத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி சலபதியின் மகன் சுதாகரராவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, ’மனுதாரர் முதலில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை துவங்கப்பட்டு விட்டதாகவும், சட்டத் திருத்ததுக்கு பின் அளித்த இரண்டாவது புகாரின்படி, விசாரணை நடத்தி உரிய காலத்தில் முடிவெடுக்கப்படும்’ என தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ’சொத்துக்கள்  மோசடியாக எப்படி அபகரிக்கப் படுகின்றன என்பதற்கு  இந்த வழக்கு ஓர் உதாரணம்’ என நீதிபதி குறிப்பிட்டார். மேலும் ’இதுபோன்ற செயல்களை தடுக்க உயர்நீதிமன்ற யோசனைப்படி, நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாடு அரசு போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கி  சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதாக’ பாராட்டும் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in