
சென்னையைச் சேர்ந்த சித்த மருந்து விற்பனையாளர் குற்றாலத்தில் உள்ள தங்கும் விடுதியில் கொலைச் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக உடன் தங்கியிருந்த செல்வம் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் 27ம் தேதி பாளையங்கோட்டையைச் சேர்ந்த நாராயணகுமார், தாழையூத்தைச் சார்ந்த செல்வம், தங்கமுத்து, மூலக்கரை பட்டியை சொந்த ஊராகக் கொண்டு சென்னை சிட்லாப்பாக்கம் பகுதியில் சித்த மருத்துவ மருந்து பொருட்கள் கடை வைத்து வியபாரம் செய்து வரும் முருகேசன் ஆகிய நான்கு பேரும் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
பின்னர் அவர்கள் குற்றாலத்திலும், அதன் சுற்றுப் புறங்களிலும் உள்ள அருவிகளுக்கு சென்று குளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் விடுதியை காலி செய்ய இருந்ததாக கூறப்பட்ட நிலையில் நான்கு நண்பர்களில் நாராயணகுமாரும் தங்கமுத்துவும் வெளியே சாப்பிட சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது அறையில் முருகேசன் மட்டுமே இருந்துள்ளார்.
சாப்பிட சென்ற இரண்டு நபர்களும் அறைக்கு திரும்பி வந்து பார்த்த போது முருகேசன் ரத்த வெள்ளத்தில் வெட்டுப்பட்டு இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த விரைந்து வந்த போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் இவர்களுடன் வந்து தங்கி இருந்த செல்வம் என்பவரைக் காணவில்லை. இந்த கொலையைச் செல்வம் தான் செய்திருக்க கூடும் என கூறப்படுகிறது. நாராயணகுமார், தங்கமுத்து, செல்வம் ஆகிய மூவரும் நண்பர்கள் என்றும், இதில் முருகேசன், நாராயணக்குமாரின் நண்பர் என்றும் விசாரணையில் தெரியவந்த நிலையில் நாராயணகுமார் மூலம் திட்டமிட்டு முருகேசனை குற்றாலத்திற்கு அழைத்து வந்து கொலைச் செய்திருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து நாராயணகுமார், தங்கமுத்து ஆகிய இருவரையும் போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் இவர்களோடு தங்கி இருந்த செல்வத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.