
ஜூடோ பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கல்லூரி மாணவர் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி கெனால் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் பாரதி சாலையில் பழைய புத்தகம் விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் லோகேஷ்(22) துரைப்பாக்கதில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில், லோகேஷ் படிக்கும் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் லோகேஷ் காபி அடித்ததாகவும், அதை பறக்கும் படையினர் கண்டறிந்து மாணவன் லோகேஷை எச்சரித்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக சட்ட விதிப்படி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது என பறக்கும் படையினர் எச்சரித்ததால் மாணவர் லோகேஷ் அச்சமடைந்ததாக தெரிகிறது. இதனால் மன அழுத்தமடைந்த மாணவன் லோகேஷிடம் அவரது கல்லூரி நண்பர்கள் ஆறுதல் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்த லோகேஷ், சோகமாக இருந்ததுடன் கல்லூரியில் நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவிக்காமல், ஜூடோ பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற லோகேஷ் இரவு முழுவதும் வீடு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர். எங்கு தேடியும் லோகேஷ் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் பட்டினம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து லோகேஷை தேடிவந்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு பட்டினப்பாக்கம் கடற்கரையோரம் வாலிபர் ஒருவர் சடலமாக கரை ஒதுங்கியிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவயிடத்திற்கு சென்ற போலீஸார் உடலை கைப்பற்றி் விசாரணை நடத்தியதில் உயிரிழந்த நபர் காணாமல் போன மாணவன் லோகேஷ் என்பதும் கடலில் குதித்தது தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் மாணவன் தேர்வில் காபி அடித்து சிக்கியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
மேலும் ஜூடோ தற்காப்புக்கலையில் பல பதக்கங்கள் வென்றுள்ள லோகேஷ் தேர்வில் முறைகேடு செய்ததாக கூறி மிரட்டியதால் லோகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.