
சென்னையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கு வரும் 28-ம் தேதி நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அதன் மூலம் இயக்கப்படுகின்றன. ஏறத்தாழ 5 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைப் பொருத்தவரை 160-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவைதவிர 15 இரு சக்கர அவசர உதவி வாகனங்களும் உள்ளன. அவசரக் கால கட்டுப்பாட்டு மையத்துக்கு தினமும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் வருகின்றன.
இந்நிலையில், 108 ஆம்புலன்ஸ்சேவையில் மருத்துவ உதவியாளர்மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூர்பா அரசு மருத்துவமனை (கோஷா மருத்துவமனை) வளாகத்தில் வரும் 28-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளன. எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
அவசரக்கால மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களில் சேர பிஎஸ்சி நர்சிங் அல்லது டிஜிஎன்எம் அல்லது பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், நுண் உயிரியல், உயிரி வேதியியல், உயிரி தொழில்நுட்பவியல் படிப்பில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும். இல்லை என்றால் ஏஎன்எம், ஜிஎன்எம், டிஎம்எல்டி ஆகிய படிப்புகளை 12-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பிறகு நிறைவு செய்திருத்தல் அவசியம் ஆகும். 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அப்பணியில் சேரலாம்.
ஓட்டுநர் பணியிடங்களில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் வைத்துள்ள 24 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் பணியில் சேரலாம். ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தது 3 ஆண்டுகளும், பேட்ஜ் உரிமம் பெற்று ஓராண்டும் நிறைவு செய்திருத்தல் அவசியம் ஆகும். அசல் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தேர்வில்பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9154189341, 9154189398, 7397724807 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.