நிலவில் ஆய்வு நடத்த இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயானின் உயரம் 3 வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. 150 கி.மீ உயரத்தில் உள்ள சந்திரயான் விண்கலம் கடந்த 30 நாட்களாக நிலவினை சுற்றி வருகிறது.
நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ சந்திரயான் - 3 என்ற விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இந்த விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்ட விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் விண்கலம் கடந்த 5-ம் தேதி நுழைந்தது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 6ம் தேதி முதல் முறையாகவும், 9ம் தேதி இரண்டாம் முறையாகவும் சந்திரயானின் உயரம் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக சந்திரயானின் உயரம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்படி நிலவின் சுற்று வட்ட பாதையில் 150 கி.மீ உயரத்தில் சந்திரயான் விண்கலம் சுற்றி வருகிறது.
இதனை தொடர்ந்து நாளை மறுநாள் சந்திரயானின் உயரம் மேலும் குறைக்கப்பட உள்ளது. இதன் பின் 17ம் தேதி உந்துவிசை அமைப்பில் இருந்து லேண்டர் தனியாக பிரியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சந்திரயான் நிலவில் இறங்கும் நிலையினை நெருங்கி வருகிறது.