
தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த நிலையில், தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி இன்று காலை 7 மணி முதல் அடுத்த 3 மணிநேரத்துக்கு தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25-26 டிகிரி செல்சியஸ் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.