26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை உள்பட 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வடக்கு கேரளா மட்டும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலம் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும். மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 14-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் நாளை வரை இலட்சத்தீவு பகுதிகள், கேரளா, கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 14-ம் தேதி இலட்சத்தீவு பகுதியில் மற்றும் அதனை ஒட்டி தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 40 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கனமழையையொட்டி திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜான் ஆல்பின் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in