2014-ம்ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை 14.5 லட்சம் கோடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மக்களவையில் ஆகஸ்ட் 7-ம் தேதியன்று எழுத்துபூர்வமான சில கேள்விகளை எழுப்பினார்.
“ 2014 முதல் தள்ளுபடி(ரிட்டர்ன் ஆஃப்) செய்யப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தொகை தொடர்பான விவரங்கள், ஆண்டு வாரியாக என்ன? தள்ளுபடி செய்யப்பட்டு பின் மீட்கப்பட்ட கார்ப்பரேட் கடன்கள் விவரங்கள் என்ன? அதிகபட்ச தள்ளுபடி பெற்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் விவரங்கள், அந்தக் கடனை தள்ளுபடி செய்த வங்கியின் விவரங்கள் என்ன?” என்று கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்விகளுக்கு நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். “இந்திய ரிசர்வ் வங்கி கார்ப்பரேட் கடன்கள் தள்ளுபடி (ரிட்டர்ன் ஆஃப்) செய்யப்பட்ட விவரங்கள் தங்களால் பராமரிக்கப் படுவதில்லை என்று தெரிவித்துள்ளது.
அதேநேரம் எஸ் சி.பி எனப்படும் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள், பெருநிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆண்டு வாரியாக தள்ளுபடி செய்யப்பட்ட கடன் விவரங்களை ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளன.
அதன்படி 2014-15-ம் நிதியாண்டில் பெரு நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு ரிட்டர்ன் ஆஃப் செய்யப்பட்ட கடன் தொகை 18 ஆயிரத்து 178 கோடி. இதே நிதியாண்டில் மொத்த தள்ளுபடி கடன் தொகை 58 ஆயிரத்து 786 கோடி ரூபாய். 2015-16 ம் நிதியாண்டில் மொத்தம் 70,413 கோடி ரூபாய், 2016-17 நிதியாண்டில் 1,08, 373 கோடி ரூபாய், 2017 -18 நிதியாண்டில் 1,61,328 கோடி ரூபாய்.
2018-19 நிதியாண்டில் 2,36,265 கோடி ரூபாய், 2019-20 நிதியாண்டில் 2,34,170 கோடி ரூபாய், 2020-21 நிதியாண்டில் 2,02,781 கோடி ரூபாய், 2021-22 நிதியாண்டில் 1,74,966 கோடி ரூபாய், 2022-23 நிதியாண்டில் 2,09, 144 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகைகளாகும்.
ஆக மொத்தம் 14 லட்சத்து 56 ஆயிரத்து 226 கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பெருநிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்ட தொகை 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயாகும்.
இவற்றில் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் 2014 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2023 மார்ச் மாதம் வரை மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 668 கோடி ரூபாய் மதிப்புக்கு தள்ளுபடி கடன்களை மீட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து மீட்ட தொகையும் இதில் அடக்கம்” என்று பதிலளித்துள்ளார்.
எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எந்தெந்த வங்கிகள் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்திருக்கின்றன என்ற விவரம் நிதித்துறை இணையமைச்சரின் பதிலில் இடம்பெறவில்லை.