வெளிநாட்டில் வேலைக்குச் சென்றால் கை நிறைய சம்பாதிக்கலாம். விரைவில் முன்னேறிவிடலாம் என்பது பெரும்பாலானோர் மனதில் பதிந்திருக்கும் ஆழமான கருத்து. அதேநேரத்தில் வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல ஆயத்தம் ஆவோருக்கு மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “தாய்லாந்து நாட்டில் டிஜிட்டல் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் அதிகாரிகள் பணியிடங்களில் பணி அமர்த்துவதாகக்கூறி இந்திய இளைஞர்களை கால் சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடிகளில் ஈடுபடுத்துவதாக பாங்காங், மற்றும் மியான்மரில் உள்ள இந்தியத் தூதரங்களின் கவனத்திற்கு வந்துள்ளது.
அதிலும் தகவல் தொழில்நுட்பத்திறனில் நல்ல புலமை உள்ளவர்கள் தாய்லாந்தில் டேட்டா எண்ட்ரி வேலை எனக் கூறி சமூக ஊடக விளம்பரங்கள், துபாய் மற்றும் இந்தியாவில் உள்ள ஏஜெண்ட்கள் மூலமாகவும் ஏமாற்றப்படுகிறார்கள். இவர்கள் சட்டவிரோதமாக மியான்மருக்கு அழைத்துச் செல்வதாகவும், கடுமையான பணிகளைச் செய்யும்மாறு அவர்கள் சிறைபிடிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல் வேலைவாய்ப்புக் காரணமாக வெளிநாடு செல்வோர், வெளிநாட்டு நிறுவனங்களின் நற்சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட தூதரகங்கள் மற்றும் ஆள்சேர்ப்பு ஏஜெண்ட்கள் மூலம் சரிபார்க்க வேண்டும். வேலை தரும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அங்கே ஏற்கனவே பணிசெய்யும் நபர்களை வைத்து சோதித்துப் பார்த்தும் செல்லவேண்டும்.” எனக் கூறப்பட்டுள்ளது.