
தலைநகர் டெல்லியில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக்குறியீடு வெகுவாக குறைந்ததால் பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தொழிற்சாலைகளின் புகை வெளியேற்றம், அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிப்பு, வாகனப் புகை ஆகியவற்றின் காரணமாக காற்றின் தரம் மிக மோசமான நிலைக்குச் சென்றது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. குறிப்பாக தீபாவளி என்று பட்டாசுகள் வெடிப்பதற்கும், அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
மேலும் கனரக வாகனங்கள் டெல்லி மாநகரத்துக்குள் நுழையவும் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்தும் உத்தரவிடப்பட்டது. இதனிடையே டெல்லியில் பெய்த மழை காரணமாக காற்றின் தளம் ஓரளவிற்கு சீரான நிலையில், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்ததின் காரணமாக மீண்டும் காற்றின் தரம் மோசம் அடைந்தது. இதனால் ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க வாகனங்களை இயக்கும் திட்டத்தை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் ஒரு வார காலம் கடந்துள்ள நிலையில், டெல்லி மாநகரின் பெரும்பாலான இடங்களில் கடுமை பிரிவிலிருந்து காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசம் என்ற பிரிவிற்கு மேம்பட்டு உள்ளது. இதையடுத்து, தலைநகர் டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைவிற்கு விதிக்கப்பட்ட தடை உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது.
இருப்பினும் அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள் மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் இயக்குவதற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசத்தில் அறுவடைக்கு பிறகு, பயிர்க்கழிவுகளை விவசாயிகள் எரிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பல்வேறு தடைகளுக்குப் பிறகும், தற்போதும் விவசாயிகள் பயிர்க்கழிவுகள் எரிப்பதை கைவிட மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.