
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுகின்றன. அவற்றின் பணியில் மத்திய அரசு தலையிடாது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது தொடர்பான கேள்விக்கு கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பதிலளித்த ஜிதேந்திர சிங், “முந்தைய யுபிஏ ஆட்சி மத்திய ஏஜென்சிகளை அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தியது. மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்க இயக்குநரகம் ஆகிய இந்த அனைத்து நிறுவனங்களையும் தற்போதைய அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது என்று கூறுபவர்கள் குறைந்தபட்சம் தங்கள் சொந்த மனநிலையைப் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் யுபிஏ காலத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். கூண்டில் அடைக்கப்பட்ட கிளி என்று உச்ச நீதிமன்றம் சொல்லும் அளவுக்கு தங்கள் அரசியல் நலனுக்காக, தங்களுக்குச் சாதகமாக அப்போது மத்திய ஏஜென்சிகளை கையாண்டார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், அரசாங்கம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் மதிப்புகளையும் பின்பற்றுகிறது. இந்த அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுகின்றன, எந்த தலையீடும் இல்லை," என்று கூறினார்