கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: செல்போனை ஒப்படைக்க பெற்றோர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: செல்போனை ஒப்படைக்க பெற்றோர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி பள்ளியில் மரணமடைந்த மாணவி பயன்படுத்திய செல்போனை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கும்படி மாணவியின் தந்தைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணைக் கோரி தந்தை ராமலிங்கம் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த நீதிமன்றம், அதன் அறிக்கைகளைப் பெற்று ஆராய்ந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்புப் புலன் விசாரணைக் குழு மற்றும் சிபிசிஐடி ஆகியவற்றின் அறிக்கைகளை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார். இதில் மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மனுதாரர் ராமலிங்கம் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் செல்போனை ஒப்படைத்தால் தான் விசாரணை நடத்த முடியும் என்றில்லை எனவும்,  அதை ஒப்படைப்பது குறித்து விளக்கத்தை பெற்றுத் தெரிவிக்க அவகாசம் கோரினார். உடற்கூறாய்வு முறையாக நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி, உடற்கூறாய்வு மூலம் எப்படி இறந்தார்கள் என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்றும், மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய செல்போன் உரையாடல்களும் விசாரணைக்கு அவசியம் எனத் தெரிவித்ததுடன்,  நியாயமான விசாரணை கேட்கும் மனுதாரர் தனது மகள் பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும் செல்போனை ஒப்படைத்தது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யப் பெற்றோருக்கும், அதை ஆய்வு செய்து அறிக்கையாகத் தாக்கல் செய்யக் காவல் துறைக்கும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in