
மாநகர பேருந்தில் ஆயுதப்படை காவலரிடம் இருந்து செல்போன், பணம், அடையாள அட்டை, பான் கார்டு திருடப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், பாப்பநாயக்கன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வினித்குமார்(24). இவர் கோவை புறநகர் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 7-ம் தேதி காவலர் வினித் பணி நிமித்தமாக சென்னை காமராஜ் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வந்துள்ளார். பணியை முடித்துவிட்டு மறுநாள் கோயம்பேட்டில் உள்ள தனது நண்பரை சந்திக்க சென்றுள்ளார் காவலர் வினித். நண்பரை சந்தித்து விட்டு மாலை மாநகர பேருந்தில் (தடம் எண் 15சி) கோயம்பேட்டில் இருந்து பாரிமுனை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பேருந்து ஈ.வி.ஆர் சாலை காவல் ஆணையர் அலுவலக பேருந்து நிறுத்தம் அருகே வரும் போது காவலர் வினித் கை பையில் வைத்திருந்த 15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், 2500 பணம், காவலர் அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காவலர் வினித் இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து பிக்பாக்கெட் ஆசாமியை தேடிவருகின்றனர்.
பேருந்தில் பயணம் செய்த காவலரிடம் பிக்பாக்கெட் அடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.