ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட 70 கோடியிலிருந்த கள்ளநோட்டுகள்... 3.48 கோடி சுருட்டிய வங்கி அதிகாரிகள்: அதிரடி காட்டியது சிபிஐ

ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட 70 கோடியிலிருந்த கள்ளநோட்டுகள்... 3.48 கோடி சுருட்டிய வங்கி அதிகாரிகள்: அதிரடி காட்டியது சிபிஐ

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்ப 70.48 கோடி ரூபாயில் போலி மற்றும் சிதைந்த நோட்டுகளை வைத்து 3.48 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

கோவை நஞ்சப்பா சாலையில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இவ்வங்கி கிளையின் துணை பொது மேலாளரும், கோவை மண்டல தலைவருமான கிரிஷ்டகௌடா கடகால் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி டெல்லி சிபிஐ வங்கி மோசடி தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், `கடந்த ஜனவரி 3-ம் தேதி தங்கள் வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு 70 கோடியே 40 லட்சம் ரூபாய் அனுப்பினோம். அந்த தொகையை ரிசர்வ் வங்கியில் வரிசைப்படுத்தும் போது, ​அனுப்பிய நோட்டுகளை ஆய்வு செய்ததில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. முரண்பாடுகள் குறித்து கடந்த ஜனவரி 4-ம் தேதி ரிசர்வ் வங்கி மூலம் விரிவான கடிதம் தங்களுக்கு அனுப்பப்பட்டது.

அதுமட்டுமன்றி, கடந்த ஜனவரி 8-ம் தேதி கோவையில் உள்ள தங்கள் வங்கியில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டதில் பல போலி மற்றும் சிதைக்கப்பட்ட நோட்டுகளை அவர்கள் கண்டறிந்தனர். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் வங்கி அதிகாரிகள் துறை ரீதியிலான விசாரணை நடத்தி, சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனை நடைபெற்ற நாட்களை கணக்கெடுத்து அந்நாளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். குறிப்பாக 28.02.2021 மற்றும் 18.12.2021 ஆகிய நாட்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் தங்கள் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களே வங்கி கருவூலத்தில் இருந்து பணத்தை எடுத்து அதற்கு பதிலாக போலி மற்றும் சிதைக்கப்பட்ட நோட்டுகளை மாற்றி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், வங்கி கருவூலத்திற்குச் செல்ல அங்கீகாரம் அளித்துள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் வங்கி கருவூல அதிகாரிகளான செல்வராஜன், ஸ்ரீகாந்த், ராஜன், ஜெயசங்கரன் மற்றும் வங்கியின் பாதுகாவலர் கனகராஜ் மற்றும் அடையாளம் தெரியாத சில அரசு அதிகாரிகள் கூட்டு சதி செய்து வங்கி கருவூலத்தில் இருந்த பணத்தை கையாடல் செய்து, அதற்கு பதிலாக போலி மற்றும் சிதைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து 3.28 கோடி ரூபாய் வரை கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

இந்தப் புகார் சென்னை சிபிஐ வங்கி மோசடி தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், மோசடியில் சம்மந்தப்பட்ட பேங்க் ஆஃப் பரோடா வங்கி அதிகாரிகள் செல்வராஜன், ராஜன், ஜெய சங்கரன், ஸ்ரீகாந்த், பாதுகாவலர் கனகராஜ் மற்றும் அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் மீது சிபிஐ 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in