சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு: சிபிஐ கோரிக்கைக்கு இன்ஸ்பெக்டர் கடும் எதிர்ப்பு

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு: சிபிஐ கோரிக்கைக்கு இன்ஸ்பெக்டர் கடும் எதிர்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான போலீஸார் மீது குற்றச்சதி பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யுமாறு சிபிஐ விடுத்த கோரிக்கைக்கு காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

சிபிஐ ஏடிஎஸ்பி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்," சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போலீஸார் என 9 பேரை சிபிஐ கைது செய்தது. 

இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 2 குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட போது ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது குற்றச்சதி (இபிகோ- 120 பி) பிரிவிலும் குற்றச்சாட்டு பதிவு செய்யுமாறு சிபிஐ விடுத்த கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேரும் குற்றச்சதி புரிந்தமைக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் போவது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக அமையும். எனவே, சிபிஐ மனுவை தள்ளுபடி செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீதும் குற்றச்சதி மற்றும் உரிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் ”என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மத்திய சிறையிலிருந்து காணொலி காட்சி வழியாக ஆஜராகி, சிபிஐ மனுவை ஏற்க ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை நீதிபதி ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in