மாணவி சத்யா கொலை வழக்கு தொடர்பாக அவரது தாயார் ராமலட்சுமி மற்றும் குடும்பதாரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13-ம் தேதி சத்யா என்ற கல்லூரி மாணவி சதீஷ் என்ற வாலிபரால் ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பாக சதீஷ் என்ற வாலிபரை ரயில்வே போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் பரங்கிமலை ரயில் நிலையம் சென்று ஆய்வு செய்து போலீஸார் விசாரணை தொடங்கினர்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக கொலையான மாணவி சத்யாவின் தாயார் ராமலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அடுத்ததாக கொலை நடந்த அன்று ரயிலை இயக்கிய ரயில் ஓட்டுநர் கோபால் என்பவரிடமும், சம்பவத்தன்று பணியில் இருந்த ரயில்வே போலீஸாரிடமும் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.