மேகேதாட்டு அணை குறித்த விவாதம் நடைபெறும்: ஆணைய தலைவரின் உறுதியால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

அணையை பார்வையிடும் ஆணையக் குழு
அணையை பார்வையிடும் ஆணையக் குழு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பழமையான கல்லணையில் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆணைய தலைவர் ஹல்தர், மேகதாது அணை குறித்து விவாதம் ஆணையக் கூட்டத்தில் நடைபெறும் என்று உறுதிபட தெரிவித்தார். இது தமிழக விவசாயிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், மற்றும் ஆணையத்தின் உறுப்பினர் நவீன்குமார் ஆகியோர் தமிழகத்தில் காவிரியில் உள்ள அணைகளை நேற்று முதல் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பீலிகுண்டு பகுதியிலும் இன்று மேட்டூர் அணை, கல்லணை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

இன்று மாலை கல்லணைக்கு வந்த அவர்கள் அணையில் கல்லணைக் கால்வாய் ஆற்றின் தலைப்பு வரை சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து கல்லணையில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வந்து, அங்கிருந்த தமிழக நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் உள்ளிட்ட அதிகாரிகளிடம், காவிரி ஆற்றின் கிளை ஆறுகள், பாசன பரப்பு, பாசன முறை ஆகியவை குறித்து கேட்டறிந்தனர்.

அணையை பார்வையிடும் ஆணைய தலைவர் உள்ளிட்டவர்கள்
அணையை பார்வையிடும் ஆணைய தலைவர் உள்ளிட்டவர்கள்
ஆணையத் தலைவரிடம் விவசாயிகள் மனு
ஆணையத் தலைவரிடம் விவசாயிகள் மனு

அதனைத் தொடர்ந்து, விவசாயிகள் வெ.ஜீவக்குமார், பூ. விசுவநாதன் ஆகியோர் எஸ்.கே.ஹல்தரை சந்தித்து மனு வழங்கினர். அப்போது அவர்கள்," தமிழகத்தில் 20 லட்சம் ஏக்கரில் செய்யப்பட்ட விவசாயம் தற்போது போதிய நீர் இல்லாத காரணத்தால் 12 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. கர்நாடக அரசு மேகேதாட்டில் அணை கட்டினால் தமிழகத்துக்கு சுத்தமாக தண்ணீர் கிடைக்காது.

மேலும், குடிநீர் பற்றாக்குறையும், பாசனமும் பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக விவசாயம் தமிழகத்தில் கேள்விக்குறியாகும். எனவே, மேகேதாட்டில் அணை கூட்ட அனுமதிக்கக்கூடாது. ஆணையம் கூட்டும் கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்து விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள கூடாது" என்று வலியுறுத்தினர். மேலும் "உச்ச நீதிமன்றம் கூறியுள்ளபடி ஆணையம் தமிழகத்துக்கு உரிய மாதந்திர நீர் பங்கீடை பெற்றுத் தர வேண்டும்" என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஆணைய தலைவரிடம் விவசாயிகள் மனு
ஆணைய தலைவரிடம் விவசாயிகள் மனு

அதனைத் தொடர்ந்து எஸ்.கே.ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காவிரி ஆறு பகுதியில் உள்ள அணைகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு வருகிறோம். வரும் 23-ம் தேதி ஆணையத்தின் கூட்டம் நடைபெறும் போது, மேகேதாட்டு அணை தொடர்பாக விவாதிக்கப்படும். தமிழக அரசு மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்க கூடாது என்று கூறியிருப்பது குறித்து, தமிழக அரசிடம்தான் கேட்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பாகும். இதன் பணி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின் படி, நீர் பங்கீட்டை செயல்படுத்துவதுதான்" என்றார்.

ஆணையத் தலைவரின் பேச்சை வைத்துப் பார்த்தால் 23-ம் தேதி நடைபெறவுள்ள ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசு வரைவுத் திட்ட அறிக்கை குறித்து நிச்சயம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றே தெரிகிறது. தமிழ்நாட்டிலேயே வந்து இந்த கருத்தை ஆணையத் தலைவர் அழுத்தமாக கூறியிருப்பது தமிழக அரசுக்கும், விவசாயிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை முறியடித்து விவசாயிகளின் நலன் காக்க தமிழ்நாடு அரசு விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

படங்கள் ஆர்.வெங்கடேஷ்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in