
சென்னையில் உள்ள சில சாலையோர பிரியாணி கடைகளில் பூனை இறைச்சி கலந்து விற்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து விலங்குகள் நல ஆர்வலர்கள் நடத்திய சோதனையில் 11 பூனைகள் போலீஸ் உதவியோடு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள சில சாலையோர பிரியாணி கடைகளில் ஆட்டு இறைச்சியுடன் பூனை இறைச்சியும் கலக்கப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சென்னை பாரிமுனை சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புகளில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு பூனைகள் கழுத்தில் மணி கட்டப்பட்டு அலங்காரத்துடன் இருந்துள்ளன. வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் திருடப்பட்டு கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 11 பூனைகளை ஏழுகிணறு போலீஸாரின் உதவியோடு அவர்கள் மீட்டனர்.
இதையடுத்து அந்த பூனைகளை திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள தனியார் விலங்கு பாதுகாப்பு நிறுவனர் ஸ்ரீராணியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீராணி கூறுகையில்," நான் மத்திய அரசு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டு, தற்போது விலங்குகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரியில் சோதனை செய்து அங்கு கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை திருடப்பட்ட செல்லப்பிராணிகள் ஆகும். அவற்றை இரவு நேரங்களில் வலைகளைப் பயன்படுத்தி பிடித்துள்ளனர். சென்னையில் பல பகுதிகளில் உள்ள நரிக்குறவர்கள் பூனைகளைப் பிடித்து ஒரு பூனையை ஆயிரம் ரூபாய்க்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கருப்பு பூனைகளைப் பிடித்து அதன் ரத்தத்தையும் விற்பனை செய்து வருகின்றனர்" என்றார். சென்னையில் பூனைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.