வேகமாக பைக் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

வேகமாக பைக் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

வேகமாக பைக் ஓட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை வகுக்க கோரியும், உரிய அனுமதியின்றி இருசக்கர வாகனத்தை மாற்றியமைத்து பயன்படுத்துவதை தடுக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபகாலமாக இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் வேகமாக இருசக்கர வாகனங்களை இயக்கியது, வாகனங்களின் வடிவத்தையும், சைலன்சர்களை மாற்றியும் இயக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோல வாகனங்களை வேகமாக இயக்குவது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாமல், பாதசாரிகளுக்கும், பிற வாகன ஓட்டுநர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும், முறையாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உரிய அனுமதியைப் பெறாமல் வாகனங்களில் மாற்றங்கள் செய்து இயக்குவது விபத்துக்களுக்கு வழி வகுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருசக்கர வாகனங்களின் வடிவமைப்பதை மாற்றி, அபாயகரமான வகையில் இயக்குவதை தடுக்கவும், வேகமாக வாகனங்கள் ஓட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வு, அமர்வு, நான்கு வாரங்களில் பதில் மனுத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in