வெளிநாடுகளைப் போல சென்னையில் இரவு நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க வழக்கு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வெளிநாடுகளைப் போல சென்னையில் இரவு நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க வழக்கு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னையில் குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது எனக் கூறி, பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரத்தில் குப்பை லாரிகளை இயக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகரில் குப்பைகளைச் சேகரித்து, குப்பைக் கிடங்குகளுக்குக் கொண்டு செல்ல லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த குப்பை லாரிகள், காலை நேரங்களில் இயக்கப்படுவதால், பள்ளி மாணவ - மாணவியரும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் குப்பை லாரிகளை இயக்க சென்னை மாநகராட்சிக்கு தடை விதிக்க கோரி கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை சாலைகளில் நிறுத்தி குப்பைகளை எடுப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குப்பைகள் மீது வலையைப் போர்த்தி செல்லாததால் காற்றில் அவை பறந்து சாலைகளில் கொட்டுகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதுடன், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

வெளிநாடுகளில் இரவு நேரங்களில் குப்பை லாரிகள் இயக்கப்படுவதைப் போல, சென்னையிலும் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்கினால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. எனவே, சென்னையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க மாநகராட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in