ஆசிட் கலந்த குளிர்பானத்தை கொடுத்தது யார்?- மாணவனை கொன்ற குற்றவாளியை கண்டுபிடிக்க களமிறங்கியது சிபிசிஐடி!

ஆசிட் கலந்த குளிர்பானத்தை கொடுத்தது யார்?- மாணவனை கொன்ற குற்றவாளியை கண்டுபிடிக்க களமிறங்கியது சிபிசிஐடி!

குமரிமாவட்டத்தில், ஆசிட் கலந்த குளிர்பானத்தைக் குடித்து இறந்த மாணவனின் வழக்கு, சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. களியக்காவிளை போலீஸாரின் வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ளது மெதுகும்மல். இந்த ஊரைச் சேர்ந்த சுனில்-சோபியா தம்பதியின் மூத்த மகன் அஸ்வின். இவர் குழித்துறை அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 24-ம் தேதி பள்ளியில் வைத்து ஒரு மாணவர் அஸ்வினுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். அஸ்வினும் வாங்கிக் குடித்துள்ளார். வீட்டிற்குச் சென்றதும் அஸ்வினுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வாயிலும் புண் ஏற்பட்டது.

இதனைத் தொடந்து சுனில் தன் மகன் அஸ்வினை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தார். அப்போது குளிர்பானத்தில் ஆசிட் கலந்து இருப்பது தெரியவந்தது. இதனால் மாணவன் அஸ்வினுக்கு குடல், தொண்டை ஆகியவை பாதிக்கப்பட்டது. இரு சிறுநீரகங்களும் செயலிழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அஸ்வின் கேரள மாநிலம் நெய்யாற்றங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். நெய்யாற்றங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இருவாரங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அஸ்வின் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்துவந்த களியக்காவிளை போலீஸாரின் விசாரணையில் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதேபோல் அஸ்வின் படித்துவந்த தனியார் பள்ளியிலும் போதிய ஒத்துழைப்பு இல்லை என காவலர்கள் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் அஸ்வின் நேற்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கும்வகையில், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அஸ்வின் படித்துவந்த தனியார் பள்ளிக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in