
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அங்கு பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பெண் காவலர்களிடம் தகராறில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த 38 வயதான தங்கபாண்டியன். தற்போது, நன்னடத்தையை மீறியதாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பணிமாறுதலில் திண்டுக்கல் ஆயுதப்படையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை மதுபோதையில் காரை ஓட்டிச்சென்ற தங்கபாண்டியன் ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள மதில் சுவரில் மோதினார். இதில், காயமடைந்த அவரை மீட்ட அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் இரவு பணியிலிருந்த மருத்துவர் மற்றும் பெண் காவலரிடம் தவறாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் இன்று நகர் வடக்கு காவல்துறையினர் தங்கபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.